Tuesday, September 20, 2016

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்


ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் கட்டுரைகளை ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். இது இன்னொன்று.
பத்து ஏக்கர்… இருபது ஏக்கர் என்று இருந்தாத்தான் வருமானம் பார்க்க முடியும்கறதில்ல. முறையா திட்டமிட்டா… மூணரை ஏக்கர்ல இருந்தே முத்தான வருமானத்தைப் பாக்கலாம். என்னோட பண்ணையே அதுக்கு சரியான உதாரணம்” என்று தெம்போடு சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்.
இரண்டு ஏக்கரில் நெல், உளுந்து, எள் சாகுபடி; அரை ஏக்கரில் மீன்குளம் கரையில் வாழை, தென்னை, தேக்கு, தீவனப்புல், பரங்கி, கீரை, காய்கறி நாற்றுகள்; இன்னொரு அரை ஏக்கரில் நெல்லியும் அதற்கு ஊடுபயிராக கீரை, வெண்டை, மிளகாய், கத்திரி, உளுந்து என ஜீரோ பட்ஜெட் முறையில் அசத்தலாக சாகுபடி செய்து வருகிறார் மகாலிங்கம்!
”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி. இங்க இயற்கை இடுபொருட்களைக்கூட அதிகம் பயன்படுத்துறதில்ல. ஆனாலும், வளர்ச்சி அபாரமா இருக்கு. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதலே ஏற்படல.
சாணத்துக்காகவும், பாலுக்காகவும் ரெண்டு எருமைகள வெச்சிருக்கேன். இப்போதைக்கு வாழை, கீரை, காய்கறிகள், நெல், உளுந்து, மீன், பால் மூலமா வருமானம் வந்துக்கிட்டு இருக்கு. நெல்லியும், மாவும் இப்பத்தான் காய்ப்புக்கு வந்திருக்கு. தென்னை இனிமேதான் காய்ப்புக்கு வரும். ஆனா, எல்லாமே நல்ல வளர்ச்சியில இருக்கு” என்று மகிழ்ச்சியோடு சொன்ன மகாலிங்கம், தொடர்ந்தார்.
”மூணு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நெல்லையும், கரும்பையும் ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தி புரிஞ்சது. உடனே, ‘இந்த மூணரை ஏக்கர் நிலத்தையும் ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணையமா மாத்தணும்’னு முடிவெடுத்தேன். இதைச் சொன்னதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ‘ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்தலைனா… தோட்டக்கலைப் பயிர்கள் தாக்குப் பிடிக்காது. குறிப்பா, நெல்லிக்கு அது ரெண்டும் அவசியம்’னு சொன்னாங்க.
நான் அதுக்கெல்லாம் அசராம, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். ரெண்டு ஏக்கர்ல சுழற்சி முறையில சீரகச் சம்பா, உளுந்து, எள், அதிசயப் பொன்னினு சாகுபடி செய்றேன். அரை ஏக்கர்ல நெல்லியை நட்டு, இடையில காய்கறிகளையும், இன்னொரு அரை ஏக்கர்ல மீன்குளம் வெட்டி, மீனையும், குளத்தோட கரையில தென்னை, வாழை, தேக்கு, தீவனப்புல், கீரை, உளுந்து, காய்கறி நாத்துகளையும் உற்பத்தி செய்றேன்” என்றவர், ஒருங்கிணைந்தப் பண்ணையத்துக்கான சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

நெல், உளுந்து, எள்!

சீரகச் சம்பா ரகம் 120 நாள் வயது கொண்ட பயிர். இதைச் சம்பா பருவத்தில், அதாவது, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடவு செய்யலாம். இரண்டு சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் தொழுவுரம், அரை டன் சாம்பல் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்டி, சீரகச் சம்பா நாற்றுகளை சாதாரண முறையில் நடவு செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனத் தண்ணீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 120-ம் நாளில் நெல் அறுவடைக்கு வரும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து விதைகளை வயலில் தெளிக்கவேண்டும். நெல் அறுவடை முடிந்த 70 நாட்களில், அதாவது மார்ச் மாதக் கடைசியில் உளுந்து அறுவடை செய்யலாம்.
அதன் பிறகு, நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு இரண்டு கிலோ எள் விதையைத் தெளிக்க வேண்டும். விதைத்ததில் இருந்து 80-ம் நாள் எள் அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கோடை சாகுபடி போல அதிசயப் பொன்னியை விதைக்கலாம். சீரகச் சம்பா நெல்லுக்கு செய்தது போலவே இதற்கும் நிலத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புகளையும் செய்ய வேண்டும். இதன் அறுவடை முடிந்த உடனே, மறுபடியும் சீரகச் சம்பாவுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் செய்துகொண்டே இருக்கலாம்.

நெல்லியும்… ஊடுபயிர்களும்!

நான்கு சால் உழவு ஓட்டி, மண்ணை, பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு போட்டு, நெல்லிக் கன்றை நடவு செய்து, உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும் (இவர் அரை ஏக்கரில் 100 கன்றுகளை நடவு செய்துள்ளார்). ஒரு மாதம் வரை 3 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு… காய்ச்சலுக்கு ஏற்ப 10 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். ஆண்டுக்கொரு முறை கவாத்து செய்ய வேண்டும். நடவு செய்த மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கும்போது மகசூல் கிடைக்கும். படிப்படியாக அதிகரித்து, ஆறாவது ஆண்டு முதல் மரத்துக்கு 100 கிலோ வரை கிடைக்கும். (இவர் நெல்லி கன்றுகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு முதல்தான் காய்ப்புக்கு வரும்).
இரண்டு நெல்லி வரிசைக்கு இடையில், 9 அடி அகலம், ஒன்றரையடி உயரம், 50 அடி நீளத்தில் பாத்திகளை அமைத்து, ஒவ்வொரு பாத்தியிலும் கீரை, காய்கறி போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம். இப்படித் திட்டமிட்டுப் பயிர் செய்தால், வேலையாட்களை அதிகமாக எதிர்பார்க்கத் தேவையில்லை. விற்பனையிலும் சிரமம் இருக்காது.

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

தென்னை கரையானை அரிக்கும் உப்பு!

குளக்கரையின் வெளி விளிம்பில் 10 அடி இடைவெளியில், மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து வரிசையாக தென்னங்கன்று நடவேண்டும். இவற்றைக் கரையான் அரிக்காமல் தடுக்க, நடவுக்கு முன்பாக ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் சாதாரண கல்உப்பு, குளத்துமண் ஆகியவற்றைப் போட்டு, தென்னங்கன்றுகளை நடவேண்டும். உடனடியாக உயிர்த் தண்ணீர் தர வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். தென்னைக்கு இடையிலும், ஒரு அடி தள்ளியும் வரிசையாக தீவனப்புல்லை நடவு செய்யலாம். இதன் மூலம் இரண்டு மாடுகளுக்கு போதுமான பசுந்தீவனம் கிடைக்கும்.

வாழைக்கு இடையில் தேக்கு!

குளத்துக் கரையின் உள் விளிம்பில் 10 அடி இடைவெளியில் வரிசையாக ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, வாழையை நடவு செய்யலாம். அரை ஏக்கர் குளத்தின் கரையில் 100 கன்றுகள் வரை நடலாம். வாழை இலைகளை அவ்வப்போது, நறுக்கி குளத்தில் போட்டால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இரண்டு வாழைக்கு இடையில் அரை அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒரு தேக்குக் கன்றை நடவேண்டும். கரையின் நடுப்பகுதியில 10 அடிக்கு 10 அடியில் பாத்திகளை அமைத்து அதில் கீரை விதைக்கலாம். மிளகாய், கத்திரி நாற்றுகளை சொந்தத் தேவைக்கு உற்பத்தி செய்யலாம்.
மழைக் காலங்களில் கரையில் காய்கறி நாற்று உற்பத்தி செய்யமுடியாது. அப்போது கரை முழுவதும் காலியாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் உளுந்து விதையை ஊன்றிவிட வேண்டும். இதைத் தவிர, கரையின் ஏதாவது இரண்டு மூலைகளில் ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரத்தைப் போட்டு, மண்ணால் நிரப்பி, குழிக்கு மூன்று பரங்கி விதைகளை ஊன்றினால்… குறைந்தபட்சம் 50 காய்கள் கிடைக்கும்.’

இரண்டு ஏக்கரில் 1,80,000

சாகுபடி பாடம் முடித்த மகாலிங்கம், வரும்படி பற்றி பேசத் தொடங்கினார்.
”நெல்லுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கறதால முளைப்புத் திறன் நல்லா இருக்கு. ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 3,600 கிலோ சீரகச் சம்பா நெல்லு, கிடைக்குது. இதுல 2,000 கிலோ நெல்லை விதைநெல்லா விற்பனை செய்றேன். கிலோ 50 ரூபாய்னு விக்கிறது மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்குது. மீதியுள்ள நெல்லை சொந்தத் தேவைக்காக வெச்சுக்குறேன். இதோட மதிப்பு 17 ஆயிரம் ரூபாய். அதிசயப் பொன்னி
3,600 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 11 ரூபாய் வீதம் விலைக்குக் கொடுக்கிறேன். இதுல 39,600 ரூபாய் கிடைக்கும்.
உளுந்து 300 கிலோ கிடைக்கும். அதை விதைக்காக வேளாண்துறையிலயே கிலோ 56 ரூபாய்னு வாங்கிக்கறாங்க. இதன் மூலமா 16,800 ரூபாய் கிடைக்கும். எள் 300 கிலோ கிடைக்கும். இதுல 200 கிலோ எள்ளை 40 ரூபாய்னு வித்துடுவேன். இதன் மூலமா 8,000 ரூபாய் கிடைக்கும். மீதி 100 கிலோ எள்ளை எண்ணெயா ஆட்டுவேன். 60 லிட்டர் எண்ணெயும்,
40 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். எண்ணெயை வீட்டுத் தேவைக்கும், புண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவேன்.
ஆக, மொத்தத்துல ரெண்டு ஏக்கர்ல நெல், உளுந்து, எள் மூலமா வருஷத்துக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.

ஊடுபயிர் மூலம் 10,000

நெல்லி இந்த வருஷம்தான் மகசூல் கொடுக்கும். ஆனா, அதுக்கு இடையில இருக்கற ஊடுபயிர் மூலமா முன்கூட்டியே வருமானம் கிடைக்கும். காய்கறி 6,500 ரூபாய், கீரை 1,500 ரூபாய், உளுந்து 2,000 ரூபாய்னு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.

அரை ஏக்கரில் 60,000

அரை ஏக்கர் குளத்துல, ஆறு மாசத்துல 500 கிலோ மீன் கிடைக்கும். கிலோ நூறு ரூபாய்னு விற்பனை செய்றேன். இப்படி வருஷத்துக்கு ரெண்டு தடவை விற்பனை செய்றதன் மூலமா 1 லட்ச ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவும் போக, 60 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.
குளக்கரை சாகுபடியைப் பொறுத்தவரை, உளுந்து 2,000 ரூபாய், பரங்கிக்காய் 3,000 ரூபாய், வாழை (நூறு தார்கள்) 7,500 ரூபாய்னு கிடைக்கும். ஆக, மீன் குளம், அதோட கரைனு மொத்தமா பார்த்தா… 1,12,500 ரூபாய் வருமானமா கிடைக்கும்

பால் 45,000

ரெண்டு எருமை மூலமா வருஷம் முழுக்க  சராசரியா 7 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 20 ரூபாய்னு விற்பனை பண்றேன். தினமும் ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ நெல் தவிடு, கால் கிலோ எள்ளுப் புண்ணாக்கு, அரை கிலோ கோதுமை தவிடும் கலந்து அடர்தீவனமா கொடுக்குறேன். கோதுமைத் தவிடை மட்டுந்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறேன். ரெண்டு எருமைக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு
15 ரூபாய்தான் செலவாகுது. ஒரு வருஷத்துல பால் மூலமா மட்டுமே 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்” என்று விலாவாரியாகச் சொன்னவர்,

”நெல்லி வருமானம் இந்த வருஷம்தான் வர ஆரம்பிக்கும். மரத்துக்கு 100 கிலோ வீதம்,

100 மரத்துக்கு 10 ஆயிரம் கிலோ நெல்லி கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சாலும்… மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.
படங்கள்:ந. வசந்தகுமார்
தொடர்புக்கு மகாலிங்கம்,
அலைபேசி: 93457-12260.
காப்புரிமை : Pasumai Vikatan

Reference:


No comments:

Post a Comment