Tuesday, September 20, 2016

மீனுக்கு அமுதக்கரைசல்

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

No comments:

Post a Comment